
நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கு கொள்ளுமாறு சீனா வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தமை குறித்து கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இது ஒரு நல்ல செய்தி. மேலும் இது நெருக்கடியை எதிர்கொள்ளவும் கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியேறவும் இலங்கைக்கு உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி கடன் பிரச்சினைகளை விரைவாகவும், திறம்படவும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு நிதியுதவி ஆதரவை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.