
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கேஸ்வரரின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆலயத்தில் பூசை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததுடன், நேற்றையதினம் சங்காபிஷேக நிகழ்வும் இடம்பெற்றது.
அதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை விசாரணை ஒன்றிற்காக ஆலய நிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிஸாரால் நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றைய தினம் காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றநிலையில், அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.