
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(02.07.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வரும், மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர்.
மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் இன்று மாலை அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ,சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் நோக்கி ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்துள்ளனர்.
இதன்போது அவர் பயணித்த வாகனம் -மதவாச்சி மன்னார் பிரதான வீதி,இசைமாளத்தாழ்வு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகில் உள்ள கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதில் காயமடைந்த அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவரும் உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது மூவரும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.