
சங்கத்தானை புளியடி சந்தியில் புகையிரத கடவை அமைக்குமாறு சாவகச்சேரி சங்கத்தானை மக்கள் நீண்டகாலமாக பல தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் பலன்கிடைக்காத நிலையில், இவ்விடயம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து இன்று (14.07.2023) காலை சங்கத்தானை புளியடி சந்திக்கு புகையிர மார்க்கமாக வருகை தந்த அவர், அங்கிருந்த மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கையை நேரடியாக கேட்டறிந்தார்.
சாவகச்சேரி சங்கத்தானை புளியடி சந்தியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர், பாதுகாப்புக்கடவை காவலாளி பணிக்கு தற்போதைய நிலையில் புதிதாக நியமனம் செய்யமுடியாததால் சாவகச்சேரி நகர சபையூடாக ஒருவரை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சாவகச்சேரி நகரசபையோடு குறித்த விடயம் தொடர்பாக வரும் வாரமளவில் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.