
அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார்
இன்று யாழில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் அல்லது வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை மூளை சம்பந்தமாக ஏற்படும் மூன்று நோய்கள் பற்றி நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.
குறிப்பாக பக்கவாதம் என்பது பொதுவாக மக்களிடையே காணப்படுகின்றது. நடுத்தர அல்லது வயது கூடியவர்களிடம் காணப்படுகின்ற ஒரு பொதுவான நோயாக காணப்படுகிறது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒரு நாளைக்கு ஆறு தொடக்கம் ஏழு நோயாளர்கள் சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகிறார்கள்.
அதேபோல வீதி விபத்துகளில் மூளை சிதைவுகள் மற்றும் ஏனைய காரணங்களினால் இறப்பு கூட ஏற்படுகின்றது வீதி விபத்துகளினால் இள வயதினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.
தொற்றா நோய்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு உயர் குருதி அமுக்கம் இருக்கின்றது என்பதை அறிந்தால் அவர் அவருடைய வாழ்நாள் பூராகவும் அதன் தாக்கம் உடம்பில் இருப்பது என்பதுதான் அர்த்தம். ஆகவே அவர் குறிப்பிடப்பட்ட அந்த மருத்தினை உட்கொள்வதுடன் குறைந்தது மூன்று தொடக்கம் 6 மாத இடைவெளியில் வைத்தியரை நாடி அவருடைய பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்குரிய மாத்திரைகளை எடுப்பதன் மூலம் வரும் நரம்பியால் நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கு மாகாணத்தில் நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றது தற்பொழுது வடக்கில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாகவே நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.
இதனால் இன்சுலின் உற்பத்தி தடைப்படுகின்றது மதுபாவனையை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் அதேபோல போதைப் பொருள் பாவனையும் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.
குறிப்பாக இளையவர்கள் நரம்பியல் நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றார்கள்.
எனவே அதிகரித்துள்ள மதுபாவனை போதைபொருள் பாவனையினால்அவர்கள் அறியாமலே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது இந்த மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.