தடா சந்திரசேகர் ஐயாவுக்கு ஈழத் தமிழர் சார்பில் இதய அஞ்சலி – சபா குகதாஸ்

நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த ஐயா ந.சந்திரசேகர் அவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக பல செயற்பாடுகளை கடந்த காலத்தில் முன்னெடுத்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக  அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய தமிழகத்தில் தடா சட்டம் திரும்பிய போது அதனை எதிர்த்து சிரேஸ்ட வழக்கறிஞ்ராக நீதிமன்றில் தொடர்ச்சியாக வாதாடி வந்தவர். அதனால் தான் தடா சந்திரசேகர் என அழைக்கப்பட்டார்.
கடந்த காலத்தில் ஈழ விடுதலை தொடர்பான மிக   உணர்ச்சிகரமான பேச்சுக்களை புலம்பெயர் தேசங்களில் சென்று பொது மேடைகளில் பகிர்ந்து கொண்டவர். மிகவும் தீவிரமாக ஈழத் தமிழர்களையும் அவர்களது விடுதலையையும்  நேசித்தவர்.
தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக மிகப் பெரும் பணிகளை ஆற்றி வந்தவர் அன்னாரின் இழப்பு  ஈழத் தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஐயா சந்திரசேகர் அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் இதய அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகி்ன்றோம் – என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews