பொதுத் தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம்…!

பொதுத் தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தின் வேதா குடியிருப்பு பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணியானது பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் மற்றும் தபாலகம் உள்ளிட்ட பொது தேவைக்காக அடையாளப்படுத்தப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வெளிநாட்டில் இயங்கும் நிறுவனத்திற்கு காணி வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த விடயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  அவ்விடத்தில் சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்களிற்கு முன்னுரிமைப்படுத்தி காணியை வழங்குமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், தமது பிரதேசத்தில் 24 குடும்பங்களிற்கு காணி வழங்க விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இவ்வாறு காணிகளை தொண்டு நிறுவனங்கள் ஊடாக வெளிநாட்டவர்களிற்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் P.ஜெயகரனிடம் வினவிய போது, உயிரிழை எனும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு விண்ணப்பித்ததற்கு அமைவாக குறித்த அரச காணி அவர்களிற்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

கிராம அமைப்புக்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews