
தவறான பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் (08) உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் மன்னார் – பெரியகடை பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சந்தியோகு (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் சாப்பாடு வாங்குவதற்காக, தனது வீட்டிலிருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மத்திய கோட்டினை தாண்டி முதியவரது பக்கத்துக்கு வந்து அவரது மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மன்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று 4 மணி அளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.