
கிளிநொச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் (26) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.







குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் :
கடந்த இரண்டு வருடங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலைகள் குறைவாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்காக பல்வேறுபட்டசெயற்றிட்டங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டமை அதிக நன்மையை அளித்துள்ளன. ஆயினும் அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது அவசியமானதாகும். இதற்கு உத்தியோகத்தர்களும் சமூக மட்டமும் இணைந்து செயற்பட வேண்டும். அனர்த்த நிலைகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
இதன்போது, வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் உண்டாகும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதனைவிட அனர்த்தங்களின் போது மக்களை பாதுகாப்பதற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய முன்னாயத்த நடவடிக்கைகள், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், வீதிப்போக்குவரத்து மற்றும் வீதி விபத்து, பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் அனர்த்த குறைப்பு செயற்றிட்டம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், நீர்பாசன திணைக்கள பொறியலாளர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சமாசங்களின் அங்கத்தவர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.