இமயமலை பிரகடனம்: எமக்குத் தொடர்பில்லை- சுமந்திரன் எம்.பி விளக்கம்

இமயமலை பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலை’ பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கின்றது’ என்று குற்றஞ்சாட்டினார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபோதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு பதிலளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்தப் பிரகடனத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அதேபோல் இதில் எமக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.

உலகத்தமிழர் பேரவையும், புத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்ததைகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்திட்டமே இந்தப் பிரகடனமாகும்.

இதில் அதிகாரப்பகிர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் மிகமுக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ‘ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு’ என்ற சொற்பதம் புத்த பிக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதுபற்றி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடப்பட்டிருப்பதுடன் அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனவே அடுத்தகட்டமாக இப்பிரகடனம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதிலேயே அதன் செயற்திறன் தங்கியுள்ளது.

அதேவேளை உலகத்தமிழர் பேரவை எம்முடன் நடத்திய சந்திப்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் இப்பிரகடனத்தை வரவேற்று எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். இவற்றுக்கு அப்பால் எமக்கு இதில் எவ்வித தொடர்புமில்லை என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews