உடுப்பிட்டியில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு கோரி வெகுண்டெழுந்த மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலைகள், ஆலயங்கள் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றக் கோரி பிரதேச மக்களால் போராட்டம் ஒன்று இன்று காலை 9;00 மணியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி சந்தியிலிருந்து ஆரம்பமான போராட்டம் வடமராட்சி தெற்கு மேற்க்கு பிரதேச செயலகம் முன் முடிவடைந்துள்ளது.

அங்கும் ஒன்று கூடிய மக்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் மதுபான சாலை வேண்டாம், இது இரு குடும்பங்களின் பிரச்சினை அல்ல, உடுப்பிட்டி மக்களின் பிரச்சினை, மதியை போக்கும் மதுவை அனுமதிக்காதே, பிரதேச செயலாளரே நீங்கள் வழங்கிய அனுமதியை இரத்துச் செய், மதிப்பிற்க்கு உரிய ஊடகங்களே வடக்கிற்க்கு வரும் ஜனாதிபதியின் காதுக்கு செல்லும்வரை பகிருங்கள், சீரழிக்காதே சீரளிக்காதே, மாணவ சமுதாயத்தை சீரழிக்காதே உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவளை குறித்த உடுப்பிட்டி மதுபான சாலை அமைக்கப்பட்டு வந்த நிலையில் உடுப்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை சமூகங்கள், ஆலய நிர்வாகம் உட்பட பொது அமைப்புக்களும் இணைந்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், மாவட்ட செயலர், பிரதேச செயலர் உட்பட பலரிடமும் நேரில் சென்றும் முறையிட்டிருந்த நிலையில் அண்மையில் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் குறித்த உடுப்பிட்டி மதுபான சாலையை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலரின் சிபாரிசில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தொலைபேசி உத்தரவில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews