
பண்டிகைக் காலத்தின் பின்னர் மரக்கறிகளின் விலை குறைவடையும் என முன்னறிவிக்கப்பட்ட போதிலும், உண்மையில் விலைகள் இன்னும் உயர்வாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான காய்கறி வகைகளின் விலை இப்போது ஒரு கிலோகிராம் ரூ.1,000ஆக இருப்பதுடன், கரட் மற்றும் பீன்ஸ் அதிகபட்ச அளவை எட்டி கிலோ ரூ.1,200 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், நாட்டில் அதிக விலையில் பதிவு செய்யப்பட்ட காய்கறி விலையாக பேலியகொடையில் உள்ள புதிய மெனிங் சந்தையில் ஒரு கிலோ கரட் ரூ. 1,400 ஆக பதிவாகியது.
அதிகரித்து வரும் விலைகள் காய்கறி நுகர்வு குறைவதற்கு வழிவகுத்துள்ளது, பல நுகர்வோர் இந்த விலையில் அவற்றை கொள்வனவு செய்வதற்கான இயலாமையை வெளிப்படுத்துகின்றனர்.
ஏறக்குறைய அனைத்து காய்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்து, நிதி சவால்களை உருவாக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சந்தை விலையில் பீன்ஸ் விலை ரூ. கிலோ 1,000. ஆனால், மற்ற காய்கறிகளின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, பச்சை மிளகாய், தக்காளி போன்றவை முறையே கிலோ ரூ. 800 மற்றும் ரூ.350 ஆக குறைந்துள்ளது.மறுபுறம், எலுமிச்சை விலை கிலோ 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் விருந்தினர் விடுதிகளை நடத்தும் வணிக சமூகம், காய்கறிகளின் விலை உயர்வு தொழில்துறையை பாதித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்தனர்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள், மரக்கறிகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் கொள்வனவுகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கரட் கிலோ ரூ.2000, முட்டைகோஸ் ரூ.680, வெண்டைக்காய் ரூ.680 என விலை போனதை சுட்டிக்காட்டினர்.
சில்லறை சந்தையில் இதுவரை இல்லாத வகையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கிடைக்கும் காய்கறிகள் தரமற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.