US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த கஜேந்திரகுமார்

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman Danny K. Davis. இவர்கள் நான்கு பேரும் தமிழர் நிலைமை தொடர்பில் தீவிரமாக அக்கறை செலுத்தியவர்கள்.

குறிப்பாக முத்த மூன்று Congress உறுப்பினர்களும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தீர்மானம் 427 எனும் தீர்மானத்தை அமெரிக்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள்.

 

குறிப்பாக நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்திய தீர்மானம் ஆகும். அந்த வகையில் நாங்கள் அவர்களை சந்தித்தபோது கேட்டுக் கொண்டது யாதெனில், இன்று போர் முடிவடைந்த பிற்பாடு தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகள் மிகத்தீவிரமாக கூட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையிலே ராஜபக்ஷ தரப்பு தமிழர்களுக்கு எதிர்ப்பு செயல்படுகளிலே தீவிரமாக இறங்கியிருந்தும் கூட, இன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்திலே நடைபெறுகின்ற செயல்பாடுகள் ராஜபக்ஷ தரப்பு காலத்திலும் விட மிக மோசமாக நடைபெற்றுள்ளது.

மிக வேகமாக தமிழர் தேசத்தை இல்லாது ஒழிக்கின்ற, தமிழர் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்கின்ற செயல்பாடுகளில் ரணில் விக்கிரமசிங்கவினுடைய அரசாங்கம் இறங்கியிருக்கின்றது. பௌத்த மயமாக்கலாக இருக்கலாம், சிங்கள குடியேற்றங்களாக இருக்கலாம், அபிவிருத்தி என்ற பெயரிலே தமிழர்களினுடைய நிலப்பரப்பினை பறித்து சிங்கள குடியேற்றங்களை நடத்துவதாக இருக்கலாம், அத்துடன் பாரிய நகர அபிவிருத்தி என்ற பெயரிலே தமிழர்களை வெளியேற்றும் செயல்பாடுகளாக இருக்கலாம், அதே நேரம் ஜனநாயகத்தை மறுத்து தமிழர்களினுடைய பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரத்தை அவமதித்து தமிழர்களினுடைய அடிப்படை உரிமைகளாக இருக்கக்கூடிய நினைவு கூரும் உரிமை போன்ற விடயங்கள் அனைத்தையும் நசுக்கி இன்று நிலைமைகள் மோசமடைந்து கொண்டு வருகின்றது.

அப்படிப்பட்ட நிலையிலே இலங்கையிலே இருக்கக்கூடிய பூகோள போட்டித்தன்மை காரணமாக சீனாவுடன் மேற்கத்தைய நாடுகள் போட்டிபோடுகின்ற நிலைமை உருவாக்கி இருக்கின்ற காரணத்தினாலே தமிழர்களினுடைய விவகாரங்கள் மிக மோசமாக போய்க்கொண்டிருந்தும் கூட அந்த விடயங்களிலே அக்கறை செலுத்தாமல் சீனாவை கட்டுப்படுத்துகின்ற ஒரு அணுகுமுறை கடைப்பிடிக்கின்ற கோணத்தில்தான் மேற்கத்தைய நாடுகள் பொதுவாக செயல்பட்டு கொண்டு வருகின்றன.

அந்த வகையிலே தங்கள் அனைவரும் தங்களுடைய இந்த அரசாங்கத்துக்கு அழுத்தங்களை செலுத்தி இன்று இலங்கையின் நிதி நெருக்கடியில் பாரிய நிதி உதவிகள் தேவைப்படும் ஒரு சூழலிலே அந்த உதவிகள் நிபந்தனைகளோடு, விசேடமாக இலங்கை அரசை மாற்றியமைத்து இனப்பிரச்சினைக்கு தமிழர்களினுடைய சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே தீர்வை பெற்றுக்கொடுத்து அதே நேரம் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை, ஒரு சர்வதேச குற்றவியல் ஊடாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களை தங்களுடைய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருந்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews