
தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய கீதம் மற்றும் தேசிய கொடிக்கான மதிப்பு அல்லது முக்கியத்துவம் தொடர்பிலான பார்வை ஒவ்வொருவருக்கும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யா / அச்சுவேலி புனித திரோச பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் பாடசாலை சீருடைத் துணிகள் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் பிரதம விருந்தினராக இன்றையதினம் கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பொதுவாக அரசியலோ அன்றி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளின் மனோநிலையிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவராகவே இருக்கின்றேன்.
இதேநேரம் எமது வடக்கு மாகாணத்தின் கல்வி செயற்பாடுகளின் மேம்பாட்டுக்கும் அதனை பாதுகாப்பதற்கும் கல்விசார் அதிகாரிகள் அதிகளவான ஊக்குவிப்புகளை வழங்கிவருகின்றனர். 

ஆனாலும் நான் அறிகின்ற வகையில் உயரதிகாரிகளின் இந்த முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லை என தெரியவருகின்றது. இந்த நிலை இல்லாது போக வேண்டும். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் நான் கவனத்தில் எடுத்து கொள்வதுடன் வடக்கின் கல்வி தரத்தை மேலும் வலுப்படுத்த என்னாலான முழுமையான ஒத்துழைப்புகளையும் எந்த வேளையிலும் வழங்க தயாராகவே இருக்கின்றேன்.
மேலும் பன்மைத்துவம் சமத்துவம், சம உரிமை போன்றவை கடந்த காலங்களில் கொள்கையளவில் மாத்திரம் இருந்தமை தான் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு காரணமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டியது அமைச்சர், இனிவருங்காலத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வகையில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
முன்பதாக யாழ் / அச்சுவேலி புனித திரோச பெண்கள் கல்லூரியில் நடைபெறும் இலவச பாடநூல் மற்றும் பாடசாலைச் சீருடை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள சென்றிருந்தஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கல்லூரி மாணவ மாணவிகள்ளால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.