
முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் –
வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்!
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் இன்று (20.02.2024) இடம்பெற்றது. 

வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ் குடாநாடாடில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் வரை வசிக்கின்றனர்.
மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்தொழில் காணப்படுகிறது.
நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து இன்றைய கலந்துரையாடலின்போது கிராம மக்களால் எடுத்துக்கூறப்பட்டது. பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் இதன் போது பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்டவரைபை சமர்ப்பிக்குமாறும் கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார். நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.
தீவகமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென ஆளுநர் குறிப்பிட்டார்.
இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டது.
இனமத பேதமின்றி நயினாதீவு மக்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்தமையானது இக்கிராமத்தை சிறந்த முன்மாதிரியாக மாற்றுவதற்கான சிறந்த ஆரம்பம் என கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர் நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டப நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் கலத்துகொண்டனர். இதேவேளை தீவிலுள்ள மதவழிபாட்டுத்தளங்களுக்கும் சென்று மதத்தலைவர்களுடனும் கௌரவ ஆளுநர் கலந்துரையாடினார். இதேவேளை இன்றைய சந்திப்பின் போது கெளரவ ஆளுநர் அவர்களினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளை உடனடியாக செயற்படுத்த
நடவடிக்கை எடுக்கபடுவதுடன், நயினாதீவை முன்மாதிரி தீவாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து அதற்குரிய திட்ட வரைபை விரைவில் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதாகவும் வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் நயினாதீவு மக்களிடம் உறுதியளித்தார்.