
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆசிரியைக்கு கடந்த சில நாட்களாக உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு பில்லி சூனியம் ஏற்பட்டதாக தெரிவித்து அவருடைய தந்தையும் குறித்த ஆசிரியையும் இளவாலை முள்ளானை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் தங்கி குணமாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இவருக்கு நேற்றுமுன்தினம் வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் போதகர் மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடலத்தை புதைக்குமாறு கூறி, உடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.