யாழ். பல்கலை மருத்துவபீட கட்டட திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டடமொன்றை திறந்துவைப்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

கல்விசாரா பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 02.05.2024 நண்பகல் முதல் தொடர்ச்சியாக தொழிற்சங்க போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றி சகல பல்கலைக்கழகங்களும் செயற்படாது இருக்கின்றவேளையில் எமது கோரிக்கைகளை தீர்த்துவைத்தலில் எவ்வித அக்கறையுமற்று காலங்கடத்தப்படுகின்றதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டிடத் தொகுதியானது அதிபர் ரணில், கல்வியமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்துவைக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

இதனை யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டிப்பதோடு இச்செயற்பாடு எமது தொழிற்சங்கப் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews