வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை……! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணிசி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் அனைத்து பக்கங்களிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் சிங்கள தேசத்தில் என்றாலும் சரி தமிழ் தேசத்தில் என்றாலும் சரி தேர்தல் தொடர்பான அரசியல் இன்னமும் நேர்கோட்டிற்கு வரவில்லை. தேர்தல் தொடர்பாக இலங்கை தீவில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் குழம்பாவிட்டாலும் இலங்கை தீவில் நலன்களை கொண்ட சர்வதேச சக்திகள் நன்றாகவே குழம்பிப்போய் உள்ளனர். அவற்றின் கவலையெல்லாம்  இவ்வளவு காலமும்     கட்டிய கட்டிடங்களையெல்லாம்; புதிதாக கட்ட வேண்டி வருமோ என்ற அச்சம் தான்.
இலங்கைத் தீவு தொடர்பாக சர்வதேச சக்திகள் இரண்டு அணிகளாக  போட்டியில் இறங்கியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான். அமெரிக்க தலைமையிலான இந்தோ – பசுபிக் மூலோபாயகாறர்கள் ஒரு அணி.  சீனா தலைமையிலான பாதை – பட்டிகாறர்கள் இன்னோர் அணி ஒரு காலத்தில் ஒரு அணி மேல் நிலையிலும் இன்னொரு காலத்தில் மாற்று அணி மேல்நிலையிலும் இருக்கும் நிலையும் தோற்றம் பெற்றது.
தற்போதைய சூழலில் இந்தோ – பசிபிக் மூலோபாயக்காறர்களே மேல் நிலையில் உள்ளனர் பேசப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதற்கான வாய்ப்பை கொடுத்திருந்தது. சர்வதேச நாணய நிதியம் போன்ற இந்தோ – பசுபிக் மூலோபாயக்காரர்களின் சார்பு நிறுவனங்கள்  இலங்கைத்தீவை அழுங்குப் பிடியில் வைத்திருக்கின்றன. பல்வேறு உதவிகள,, ஒப்பந்தங்கள் என்பனவும் இக்கட்டிப் போடலில்; துணை புரிந்து இருக்கின்றன. இப்போது இந்தோ – பசுபிக் மூலோபாய காறர்களின் கவலையெல்லாம்  இதனை தொடர்ச்சியாக தக்க வைப்பது  எவ்வாறு என்பதே! தேர்தல்களை  தொடர்ச்சியாக பிற்போட முடியாத நிலை உருவாகியுள்ளது என்பது அவர்களது மிகப்பெரிய கவலை. தேர்தல்களைப் பிற்போட்டால் சட்டத்தின் ஆட்சி , யாப்பு ஆட்சி என்பன  அனைத்தும் குழம்பும். இப்போக்கு தமது அனைத்து செயல் திட்டங்களையும் குழப்புவதாக என அவர்கள் அஞ்சுகின்றனர்;.
ரணில் விக்கிரமசிங்க இந்தோ – பசுபிக் மூலோபாயக்காறர்களை பொறுத்தவரை மிகப்பெரிய சொத்து. அவரைப் போன்ற அனைத்து வழிகளிலும் விசுவாசியான ஒருவரை இலங்கையில் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை வெற்றியை உறுதிப்படுத்த முடியாத ஒருவர்  என்பதே அவர்களது கவலை. இன்னமும் அவர் இரண்டாம் நிலைக்கே வரவில்லை. இந்நிலையில் முதலாம் நிலைக்கு எவ்வாறு கொண்டு வருவது? என்பதே அவர்கள் சந்திக்கின்ற பெரிய நெருக்கடி. ரணில்; இல்லாவிட்டால் இலங்கை தீவே இருண்டு விடும் என பல வெருட்டுகளைக் கூறினாலும் சிங்கள வாக்காளர்கள் அசைவதாக இல்லை.
ரணிலையும், சஜித்தையும்  இணைப்பதற்கு திரை மறைவிலும் வெளிப்படையாகவும்  பலமுயற்சிகள் எடுக்கப்பட்டன. சாம , பேத, தான, தண்டம் என எல்லா முயற்சிகளும்  பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. சஜித் பிறேமதாச அசைவதாக இல்லை. அரசியல் தற்கொலை செய்வதற்கு சஜித் பிறேமதாசா அரசியலில் கற்கும் குழந்தை அல்லவே! பாதிப்பை குறைப்பதற்காக கருஜய சூரியாவை பொது வேட்பாளராக இறக்கும் முயற்சியும்; நடந்தது. அதுவும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
தனக்கு வெற்றி வாய்ப்பு இருக்காது என்று தெரிந்தால் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடப் போவதில்லை. இன்று மற்றய போட்டியாளர்கள்  இருவரும் பகிரங்கமாக தம்மை வேட்பாளர்களாக அறிவித்து விட்டனர். ரணில் விக்கிரமசிங்க மட்டும் இன்னமும் அறிவிக்காது இருக்கின்றார். மேற்குலகம் எதையாவது செய்யும் என அவர் நம்பக் கூடும். இதனால் தொடர்ந்து பொறுமை காத்து வருகின்றார். கடந்த பாராளுமன்றத் தேர்தல் போல  பெருந் தோல்வியை சந்திக்க அவர் தயாராக இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியை உடைத்து ஒரு பகுதியை தம்பக்கம் இழுக்காமல் ரணில் விக்ரமசிங்கவினால் ஒருபோதும் தன்னை நிலை  நிறுத்த முடியாது.
தென்னிலங்கை களநிலவரம் இவ்வாறு  கலங்கிய நிலையில் இருக்கின்ற சூழலில்தான் தமிழர் தாயகத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்துத் தளங்களிலும்; அதுபற்றிய விவாதம் இடம்பெறத் தொடங்கியுள்ளது. அண்மையில் யாழ் பல்கலைக்கழக அரச அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் மெய்நிகர் ஊடகம்மூலம் விவகாரத்தை நடாத்தியுள்ளனர். மக்களும் இது பற்றி பரவலாக உரையாடத் தொடங்கியுள்ளனர். சிங்கள வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்கின்ற உரையாடல் மாறி இன்று சிங்கள வேட்பாளரா? தமிழ் வேட்பாளரா? என உரையாடல் முன்னேற தொடங்கியுள்ளது. வடக்கிற்கு வரும் ராஜதந்திரிகளும் பொது வேட்பாளர் பற்றிய அபிப்பிராயங்களை அக்கறையுடன் கேட்டு வருகின்றனர். சிங்களச்சக்திகளும் இதில் கவனத்தை குவிக்க தவறவில்லை. சிங்கள ஊடகங்களும் இது பற்றி பேசத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் எப்போதும் அனுபவ ரீதியாக செயல்படுவதே வழக்கம். சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து எந்தவித பயனும் இல்லை  என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர.; இதனால் பெரும்பான்மையான தமிழ் மக்கள் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலையே உள்ளது. சிறிய எண்ணிக்கையானோரே மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். பொது வேட்பாளரின் அரசியல் முக்கியத்துவத்தை தமிழ் மக்கள் பெரியளவிற்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என கூற முடியாது. அரசியல் சக்திகளும் அது பற்றிய  போதிய விளக்கத்தை இன்னமும் மக்களுக்குக்  கொடுக்கவில்லை.
தமிழ் அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை 2009க்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் பிரதிபலிப்புத்தான் தொடர்கிறது. 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருபோக்குகள் தமிழ் அரசியலில் ஏற்பட்டன. ஒன்று தமிழ் மக்கள் இதுவரை காலம் பின்பற்றிய தமிழ்த் தேசிய அரசியலை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் முன் கொண்டு செல்வது. இரண்டாவது கடந்த கால அரசியலை முழுமையாகக் கைவிட்டு  இணக்க அரசியலுக்கு செல்வது. முதலாவது போக்கை தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் சிவில் சமூக அமையம் , தமிழ் மக்கள் பேரவை என்பன பின்பற்ற இரண்டாவது போக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்பற்றியது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறிப்பாக சம்பந்தன் – சுமந்திரன் தலைமையின் இணக்க அரசியல் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்தது. இது ஒரு வகையில் சிங்கள அரசியலின் தோல்வி எனலாம.; தமிழ் தரப்பில் மிதவாதிகளாக இருக்கின்ற சம்பந்தன் – சுமந்திரன் போன்றோரையே திருப்தி படுத்த அவர்களால் முடியவில்லை. சம்பந்தன் தமிழ் தேசிய அரசியலை கைவிட்டமையும், நல்லாட்சி அரசாங்க காலத்தில் கனவான் அரசியலை மேற்கொண்டமையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றமையும,; சிங்கக் கொடியை அசைத்தமையும் இந்த இணக்க அரசியலுக்காகத் தான்.
விளைவு கூட்டமைப்பு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்தது. தொடர்ந்து கூட்டமைப்பு உடைந்து சிதறியதோடல்லாமல் தமிழரசு கட்சியும் இணக்க அரசியல், இறைமை அரசியல் என இரண்டாகப் பிளவுபட்டது. சிறீPதரன் – சுமந்திரன் முரண்பாடு என்பது முழுமையாக இறைமை அரசியல் – இணக்க அரசியல் முரண்பாடு தான.;  தமிழ்ப்பொது வேட்பாளர் விவகாரத்திலும் இந்த பிளவே ஏற்பட்டுள்ளது. இணக்க அரசியலை ஆதரித்த சம்பந்தன் – சுமந்திரன் அணியினர் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர். அதேவேளை இறைமை அரசியலை ஆதரித்த சிறீதரன் அணியினர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனர்.
கருத்துருவாக்கிகளிலும் கொழும்பு மைய கருத்துருவாக்கிகள் தமிழ் பொது வேட்பாளரைப் எதிர்க்கின்றனர.; தமிழர் தாயக மைய கருத்துருவாக்கிகள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனர். கொழும்பு கருத்துருவாக்கிகளின் இருப்பு கொழும்பு சார்ந்தது. எனவே அவர்களது எதிர்ப்புக் கருத்துக்கள் எதிர்பார்க்கக் கூடியவையே!
தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றிய கோட்பாட்டு புரிதலை பெற்றுக் கொள்வதற்கு தமிழ் அரசியல் பற்றிய புறநிலை அகநிலை ஆய்வு மிக அவசியம். தமிழ் அரசியலின் புறநிலை தமிழ் அரசியலுக்கு சார்பாக இல்லை. சிங்கள ஆட்சியாளர்களை பொறுத்தவரை அவர்கள் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் தரத் தயார் இல்லை. அரசியல் யாப்பில் உள்ள 13வது திருத்தத்தைக் கூட நடைமுறைப்படுத்த அவர்கள் தயாராக இல்லை. மறுபக்கத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிக்கின்ற  கட்டமைப்புசார் இனஅழிப்பை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர.; அதற்காக மாபெரும் கொள்கை திட்டமும், செயல்திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  காணிப்பறிப்பு, மொழிப்பறிப்பு, பொருளாதார சிதைப்பு, கலாச்சார புறக்கணிப்பு என்பன தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இன அழிப்பு இலங்கை அரசின் திட்டமாக இருப்பதனால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதனை செய்து கொண்டே இருக்கும்.
இன்னோர் பக்கத்தில் பச்சை ஆக்கிரமிப்பையும், தீர்வைத் தர தயார் இல்லை என்பதையும் மறைப்பதற்காக பொருளாதாரப் பிரச்சினையை மட்டும் தூக்கிப்பிடிக்க முனைகின்றது. இன பிரச்சினையை நிலவிரிப்புக்குள் தள்ளுகின்றது. இத்தனைக்கும் பொருளாதார நெருக்கடியின் மையம் இனப் பிரச்சனைதான் என்பதும் இனப் பிரச்சனையை தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இலங்கை தீவைப் பொறுத்தவரை முழு இலங்கை தீவும் பூகோள அரசியல்காரர்களுக்கும் புவிசார் அரசியல் காரர்களுக்கும் தேவை. இதனால் அவை பெரும்பான்மையாக சிங்கள சமூகம் வசிப்பதால் அதற்குப் பின்னால் இழுபட்டுச் செல்லவே முயற்சிக்கின்றன. இனப்பிரச்சினை விவகாரத்தில் ஆட்சியாளர்களுக்கு மென்அழுத்தத்தை கொடுக்க விரும்புகின்றன. தமிழ் மக்களை தங்கள் நலன்களுக்கு கறிவேப்பிலைகள் போல பயன்படுத்தவே  முனைகின்றன. இனப் பிரச்சனை தீர்க்காமல் தங்கள் நலன்களை பேண முடியாது என்கின்ற நிலை வரும்போது மட்டும் தான் இவர்கள் தமிழ் மக்களின் நலன்களை தூக்கிப்பிடிக்க முயற்சிக்கும். இனப்பிரச்சனை ஒன்று இருக்கின்றது என்பதை நிலைநிறுத்தும் போது தான் அவர்களும் தமிழ் மக்கள் பக்கம் பார்வையை திருப்ப முயற்சிப்பார்கள்.
இன்னோர் வகையில் இதனை கூறுவதாயின் பூகோள அரசியலிலும் புவிசார் அரசியலிலும் தமிழ் மக்களும் கௌரவமான பங்காளிகளாக மாற வேண்டும். புலிகள் இயக்கம் இருக்கும் வரை தமிழ் மக்கள் கௌரவமான பங்காளிகளாக இருந்தனர். தமிழ் மக்களின் விவகாரத்தை கைவிட்டு விட்டு சிறிய அசைவைக் கூட மேற்கொள்ள முடியாத நிலை பூகோள அரசியல் காறர்களுக்கும், புவிசார் அரசியல்காறருக்கும் இருந்தது.
அகநிலையில் இன்று தமிழ் மக்களுக்கென ஒரு அரசியல் தலைமை இல்லை. கட்சிகள் என்ற அந்தஸ்தில் கூட ஒரு அரசியல் கட்சிகளும் இல்லை. இருப்பவை எல்லாம் தேர்தலில் போட்டியிடும் குழுக்கள் மட்டும்தான.; இவையும் கூட தங்களுக்கு ஒருங்கிணைந்தவையாக இல்லை. கதிரைகளும் அதற்கான டீல்களுமே அவற்றின் இலக்காக உள்ளன. கதிரை அரசியலையும், டீல் அரசியலையும் மட்டுமே முன்னெடுக்க முனைகின்றன. தமிழ் தேசிய அரசியல் பற்றிய அக்கறை எதுவும் இவற்றிற்கு கிடையாது. வலுவான அரசியல் தலைமை இல்லாததால் தமிழ் சமூகத்தை கட்டுறுதியான அரசியல் சமூகமாகவும் வளர்த்தெடுக்க முடியவில்லை. இதன்; தாக்கம் சாதகமான சூழலை கூட கையாள முடியாத நிலைக்கு தமிழ் சமூகத்தை கொண்டு சென்றது. அமெரிக்க காங்கிரஸில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் முழந்தாலிட்டு அஞ்சலி செலுத்தியமை, கனடா பாராளுமன்றத்தின் இன அழைப்பு தீர்மானம் என்பன எல்லாம் அண்மைக்காலத்தில் கிடைத்த சாதகமான அம்சங்கள். இவற்றை திரட்ச்சியாக்கி முன் கொண்டு செல்ல தமிழ் தரப்பால் முடியவில்லை. இன்னோர் பக்கத்தில் சமூக சிதைவு அரசினால்;; திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. போதை வஸ்து பாவனை, வாள்வெட்டு என்பன ஒரு கலாச்சாரமாக பரவத் தொடங்கியுள்ளது. அரசபுலனாய்வுத்துறை இதனை திட்டமிட்டு வளர்க்கின்றது. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச உணர்வையும் இல்லாமல் செய்வதே அதன் இலக்கு.
இந்தப் புறநிலை அரசியலிலும் அகநிலை அரசியலிலும் ஆக்கபூர்வமான முறிவை ஏற்படுத்த வேண்டும.; ஜனாதிபதி தேர்தல் அதற்கான வலுவான சந்தர்ப்பத்தை தந்துள்ளது. ஒடுக்குமுறை அரசின் ஜனாதிபதி தேர்தலையே தமிழ் மக்கள் தமது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.
முதலில் இந்த ஒடுக்குமுறை அரசினை சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும். இன அழைப்பை மேற்கொள்ளப் போகின்ற ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்துக்கொண்டு அரசின் மீதான அம்பலப்படுத்தல்களை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. இரண்டாவது தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒருங்கிணைந்து சொல்ல வேண்டும். இது விடயத்தில் முன்னரும் சொல்லப்பட்டுள்ளது. தானே என கூறலாம். ஆனால் ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மூன்றாவது சிதைந்து போய் இருக்கும் தமிழ்ச் சமூகத்தை ஐக்கியப்படுத்தி ஒரு கட்டுறுதியான அரசியல் சமூகமாக மாற்ற வேண்டும.;
மொத்தத்தில் தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ் அரசியலை வழி தடத்தில் ஏற்றும் முயற்சி.
வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை என்பதை தமிழ் தரப்பு புரிந்து கொள்வது அவசியம்.

Recommended For You

About the Author: Editor Elukainews