
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான சமூக அமைப்புகளுடனான தொடர்ச்சியான சந்திப்பும் கலந்துரையாடலும் வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினருடன் பொதுவேட்பாளர் தொடர்பில் செயற்படும் சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது .



இச்சந்திப்பில் யாழ் மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கம், சிக்கன கடன் கூட்டுறவு சங்கம், கால்நடை கூட்டுறவு சங்கம், பனை தென்னைவள கூட்டுறவு சங்கம், கிராமிய வங்கி நுகர்ச்சி கூட்டுறவு சங்கம் ஆகிய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்கள் சார்பில் அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சி.அ யோதிலிங்கம், சமூக செயற்பாட்டாளர் சி. சுந்தரேஸ்வரன், பண்பாட்டு மலர்ச்சி கூடத்தின் இயக்குனரும் பேராசிரியருமான சிதம்பரநாதன், முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரான விஜயகுமார் மற்றும் இந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் அவசியத்தை ஏற்றுக் கொண்ட யாழ் மாவட்ட கூட்டுறவு சபையின் உறுப்பினர்கள் தங்கள் பூரண ஆதரவினையும் தெரிவித்தனர். தங்களையும் பொது வேட்பாளர் தொடர்பிலான பொதுக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் வவுனியாவில் சிவில் சமூக பிரதிநிதிகள் கூடிப் பேசியதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொது மக்கள் ஆகியோரை சிவில் சமூக கூட்டிணைவின் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.