சுமந்திரனின் துரோகிக் பட்டம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது…! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

துரோகி பட்டம் கிடைத்தாலும் பொது வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என சுமந்திரன் சூளுரைத்திருக்கின்றார். சுமந்திரனுக்கு இப்பட்டத்தை புதிதாக சூட்டத் தேவையில்லை. அவருக்கு அது ஏற்கனவே கிடைத்து விட்டது. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனக் கூறிய போதும் “ஏக்கிய ராச்சிய” சிந்தனையை முன்வைத்த போதும் அவருக்கு கிடைத்து விட்டது. மரபு ரீதியான கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியதோடு அது நிரந்தரமாகிவிட்டது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இறுதியாக மனிதரை கடிப்பது போல பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட்டமைப்புடன் மோதி, தமிழரசுக் கட்சியுடன் மோதி இறுதியாக சிவில் அமைப்புகளுடனும் சுமந்திரன் மோதத் தொடங்கியுள்ளார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன் முழு வடிவம் வருமாறு.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இறுதியாக மனிதரை கடிப்பது போல பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட்டமைப்புடன் மோதி, தமிழரசுக்கட்சியுடன் மோதி இறுதியாக சிவில் அமைப்புகளுடனும் மோதத் தொடங்கியுள்ளார்.
சுமந்திரனின் அண்மைக்கால வரலாற்றில் சுமந்திரன் முதலில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடன் மோதினார். கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் விலகுவதற்கும் அது காரணமாகியது.
 அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், என ஒவ்வொன்றாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறின. பின்னர் தனது சொந்த கட்சிக்குள்ளேயே தனது கொழும்பு நலன்சார் அரசியல் காரணமாக கட்சிக்குள் இருக்கும் இறைமை அரசியல் காரர்களோடு மோதத் தொடங்கினார. இதன் உச்ச வடிவமாக 75 வருட கால நீதிமன்றப் படியே ஏறாத மரபு ரீதியான கட்சியை நீதிமன்ற படியில் ஏற்றினார்.  தற்போது தமிழ் சிவில் அமைப்புக்களுடன் மோதத் தொடங்கியுள்ளார்.
கடந்த 9ம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற ஈழத்தமிழர் “சுய நிர்ணய உரிமை பொதுநிலை பாடும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்திலேயே மோதலைத் தொடக்கி வைத்திருக்கின்றார். அங்கு அவர் தமிழ் சிவில் அமைப்புகளின் கூட்டிணைவான “தமிழ் மக்கள் பொதுச் சபை” மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார.

கூட்டத்திற்கு முதலில் வருவதாக கூறிவிட்டு பின்னர் வரவில்லை. பாசிசவாதிகளாக தங்களை இனங்காட்டி கொள்கின்றனர. தமிழ் மக்களின் ஆணையை தொடர்ந்தும் நிறுவ தேவையில்லை. தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு விசப் பரீட்சை என குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன் தேர்தல் அரசியல் தொடர்பாக மக்களை சிவில் அமைப்புகள் வழிநடாத்த கூடாது. அந்த உரிமை மக்களினால் தெரிவு செய்யப்பட்ட எமக்குத்தான் உரியது என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இங்கு சுமந்திரன் கூறிய பல விடயங்கள் உண்மைக்குப்புறம்பானவை.

கடந்த சித்திரை 30 ம் திகதி வவுனியா விருந்தினர் விடுதியில் கூடிய வடக்கு – கிழக்கைச் சேர்ந்த 43 தமிழ் சிவில் அமைப்புகள் வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சில தீர்மானங்களை எடுத்தன. வரப்போகும் ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் என்ற வகையில் நிராகரித்தல், தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான பொது வாக்கெடுப்பாக தேர்தலை மாற்றுதல், இதற்காக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துதல்,  இச்செயற்;பாடுகளை முன்னெடுக்கும் வகையில் தமிழ் சிவில் அமைப்புகளும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்த பொது கட்டமைப்பை நிறுவுதல்,  தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசையான இறைமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கு பொருத்தமான எதிர்கால கட்டமைப்புகளை உருவாக்குதல் என்பனவே அத்தீர்மானங்களாகும்.
இது பற்றி முன்னைய கட்டுரையிலும் கூறப்பட்டுள்ளது. இது விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகளுடன் பேசுவதற்காக ஒரு குழுவும் உருவாக்கப்பட்டது. அந்தக் குழு முதலில் பேசியது தமிழரசுக்கட்சியுடன் தான். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் அவரது மாவிட்டபுர இல்லத்தில் இது தொடர்பான உரையாடல் இடம் பெற்றது. சுமந்திரனுடன் பேசும் தீர்மானம் ஆரம்பத்தில் இருக்கவில்லை. சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்களும் அதனை விரும்பவில்லை.
சுமந்திரன் கட்சியின் தலைவர் அல்ல. தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரானவர். தனது கொழும்பு நலன்சார் அரசியல் காரணமாக தமிழ் பொது வேட்பாளரை பகிரங்கமாக நிராகரிப்பவர், என்பவை அதற்குக் காரணங்களாக கூறப்பட்டன எனினும் மாவை சேனாதிராஜா சுமந்திரனுடனும் பேசும் படி கேட்டதனாலும் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட்டவர் என்பதனாலும் அவருடன் பேசப்பட்டது. அவர் பொது வேட்பாளரை ஆதரிப்பார் எந்த நம்பிக்கையும் தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளிடம் இருக்கவில்லை.
உரையாடலின் ஆரம்பத்திலேயே மக்களிடம் ஆணை பெறுதல் என்ற விடயத்தையே சுமந்திரன் ஆரம்பித்தார. ஆணை தேவையில்லை என்பதை விட மக்களின் ஆணையை பெறுதல் தோல்வியடையும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி “தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு” என்று கூறியே போட்டியிட்டது. அந்த தேர்தலில் கல்குடா தேர்தல் தொகுதியைத் தவிர வடக்கு – கிழக்கின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. கல்குடா தேர்தல் தொகுதியில் 545 வாக்குகள் வித்தியாசத்தில் தேவநாயகத்திடம் தோல்வி அடைந்தது. தமிழ் மக்களின் வாக்களிப்பு என்று பார்க்கும்போது 70 வீதத்திற்கு மேல் ஆதரவு கிடைத்திருந்தது. தமிழீழம் என பார்க்கும் போது 50 வீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைத்திருந்தன.
ஆனால் சுமந்திரனின் வாதம் வேறு விதமாக இருந்தது. வடக்கு – கிழக்கில் 50 வீதத்திற்கு குறைவான வாக்குகளே 1977 தேர்தலில்; கிடைத்தன. புத்தளம் மாவட்ட வாக்குகளையும் சேர்த்தே மட்டுமட்டாக 50 வீதத்திற்கு மேல் கிடைத்தது என அவர் கூறியிருந்தார்.
தமிழீழ வரைபடம் என்பது புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கியது என்பதை அவர் இலாவகமாக மறைத்திருந்தார்.
அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லீம்களையும் இணைத்த தமிழீழம் என்ற கொள்கை தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை அக் கொள்கை மாபெரும் வெற்றியை ஈட்டியது என்பதே உண்மையாகும்.
 தற்போது கூறியது போல ஆணையை நிறுவ தேவையில்லை என்ற கருத்தை அவர் முன் வைக்கவில்லை. தற்போது 1956 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். அதனை மீண்டும் நிறுவ தேவையில்லை என சுமந்திரன் வாதிடுகின்றார்.
 1977 ஆம் ஆண்டு தேர்தலை தவிர அனைத்து தேர்தலிலும் சமஸ்டிக் கோரிக்கையை வைத்தே போட்டியிட்டார்கள். சமஸ்டிக் கோரிக்கையை முன்வைக்காமல் எந்த தேர்தலிலும் தமிழரசுக்கட்சி போட்டியிடவில்லை. தமிழரசுக்கட்சி உருவான 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதியிலிருந்து தமிழரசுக்கட்சியின் அனைத்து மாநாடுகளிலும் சமஸ்டித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமந்திரனின் கூற்றுப்படி பார்த்தால் 1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு சமஸ்டிக் கோரிக்கையை முன் வைத்திருக்கத் தேவையில்லை மாநாடுகளிலும் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டிய அவசியமிருக்கவில்லை.
உண்மை அதுவல்ல.
ஒரு கோரிக்கையை முன் வைத்தால் அது நிறைவேறும் வரை அதனைத் தொடர்ச்சியாக முன் வைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். மக்கள் அந்தக்கோரிக்கை தொடர்பாக விழிப்புடன் இருப்பதற்கும், அரசியல் தலைவர்கள் அந்த கோரிக்கையிலிருந்து விலகாமல் இருப்பதற்கும், சர்வதேசத்தின் கவனத்தை தொடர்ச்சியாக ஈர்ப்பதற்கும், இத்தொடர்ச்சி என்பது மிக அவசியம்.
தேசமாக அதனை முன் வைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
தமிழ் அரசியலின் இன்றைய சூழலில் இது மிக அவசியம், இன்று 13வது திருத்தத்தை தீர்வாக ஏற்பதற்கு சில தரப்புகள் முயற்சிக்கின்றன. தென்னிலங்கை கட்சிகள் தமிழர் தாயகத்தில் கூடாரமடிக்க முனைகின்றன. சுமந்திரன் உட்பட சில தரப்புகள்  வடக்கு – கிழக்கு  பிரிக்கப்பட்ட ஒற்றையாட்சிக்குள் தீர்வை நோக்கி நகர பார்க்கின்றனர். இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இதுதான் தேவை என உரத்து கூற வேண்டிய காலமாக இன்றைய காலம் உள்ளது.
பொது வேட்பாளர் தேவை என்பதற்கு தமிழ் மக்கள் பொதுச் சபையினர் பிரதானமாக மூன்று காரணங்களை முன் வைத்திருந்தனர். அதில் முதன்மையானது தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுதல். இரண்டாவது அரசை அம்பலப்படுத்துதல், மூன்றாவது மக்களின் தொடர் ஆணையைப் பெறுதல் என்பனவே அவையாகும்.
இன்று தேசமாகத் திரட்டுதல் மிகவும் பலவீனமாக இருக்கின்றது. தமிழ் மக்கள் கட்சிகளாலும், அக முரண்பாடுகளினாலும், தென்னிலங்கை ஊடுருவல்காறர்களினாலும் சிதறுண்டு இருக்கின்றனர்.  ல அவர்களுடைய வாக்களிப்பும் சிதறிச் செல்வதற்கே வாய்ப்புக்கள் உள்ளன.
இந்நிலையில் தமிழ் மக்களை ஒரு தேசமாகத்திரட்டுவது அவசியமானது. இந்தக் காரணத்தை சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டத்தில் மறைத்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் பொதுச் சபை பிரதிநிதிகள் சுமந்திரனுடன் கலந்துரையாடிய போதும் இந்தக் காரணம் அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. “நீங்கள் பேரம் பேசுவதாயின் கூட மக்களை ஒருங்கிணைக்க வேண்டுமே” எனக் கூறிய போது அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இதனைப் பொதுவெளியில் பேசுவோம் என்றார். ஆனால் யாழ்ப்பாணக்கூட்டத்தில் இது பற்றி இவர் வாயே திறக்கவில்லை. மூன்றாவது காரணியான அரசை அம்பலப்படுத்துதல் என்பது பற்றியும் வாய் திறக்கவில்லை. அரசை அம்பலப்படுத்தாமல் தமிழ் மக்களின் நியாயப்பாடுகளை எவ்வாறு நிரூபிக்க முடியும்?
சுமந்திரனின் இரண்டாவது குற்றச்சாட்டு பொதுவெளியில் விவாதிப்பதற்கு வருகின்றோம் என்று கூறிவிட்டு பின்னர்  நிராகரித்திருக்கின்றனர் என்பதாகும். தமிழ் மக்கள் பொதுச்சபைப்  பிரதிநிதிகள் எந்த சந்தர்ப்பத்திலும் சுமந்திரன் கூட்டும் கூட்டத்திற்கு வருகிறோம் என கூறவில்லை.
பொதுப்படையாக பொதுவெளியில் பேசுவோம் என்றே கூறியிருந்தனர்.
இரண்டு முரண்பட்ட தரப்புக்கள் ஒரு பொது விவாதத்தில் கலந்து கொள்வதானால் இரண்டு தரப்பும் இணைந்து அந்த நிகழ்வை ஒழுங்கு செய்ய வேண்டும் அல்லது யாராவது பொதுத் தரப்பு ஒழுங்கு செய்ய வேண்டும். சுமந்திரன் தன்னுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக ஒழுங்கு செய்துவிட்டு விவாதத்தில் கலந்து கொள் என்றால் எவ்வாறு கலந்து கொள்ள முடியும். கலந்து கொள்ளாததற்காக பாசிசவாதிகள் என்ற பட்டத்தையும் சூட்டுகின்றார். பாசிசம் என்பதன் உண்மையான அர்த்தம் “எதேச்சாதிகாரமாக செயற்படுதல்” என்பதேயாகும். வரலாற்று ரீதியாக இந்த பட்டம் சுமத்திரனுக்கே அதிகம் பொருந்தும்.
கட்சிக்குள் அவர் பல சந்தர்ப்பங்களில் தனித்தே முடிவுகளை எடுத்து செயல்படுத்தியிருந்தார். அவரது சர்வதேசப் பயணங்கள் தொடக்கம் உள்ளூராட்சி சபை வேட்புமனுத்தாக்கல் வரை நிறைய உதாரணங்கள் உண்டு.  உள்ளூராட்சி சபை தேர்தல் விவகாரத்தில் கட்சியின் தலைவர் உட்பட மூத்த தலைவர்கள் யாழ் மாட்டின் வீதி தலைமையகத்தில் காத்திருந்தனர்.
அவர்களுக்குத் தெரியாமலே அவர் வேட்புமனுத்தாக்கலை செய்திருந்தார். வெளிநாட்டுப் பயணங்களில் தனித்து ஓடுவதற்கு அவர் கூறிய காரணம் மற்றையவர்கள் இரகசியங்களை கசிய விட்டு விடுவார்கள் என்பதே!
அடுத்தது அவரது எச்சரிக்கை. தேர்தல் ஒரு அரசியல் நிகழ்ச்சி. அதனை வழி நடத்துவதற்கு மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அதிகாரம் உண்டு. சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு உரிமையில்லை என அவர் எச்சரிக்கின்றார்.
 பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், சிவாஜிலிங்கமும் இதற்கு வலுவான எதிர்வினையைக் காட்டியிருக்கின்றனர். சிவில் அமைப்புகளும் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான். தங்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சரியாகச் செயற்படாத போது சிவில் அமைப்புகள் விவகாரத்தை தங்கள் கையில் எடுப்பதுண்டு. தமிழர் அரசியல் வரலாற்றிலும் இது நடைபெற்றிருக்கின்றது. 1968 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் இணக்க அரசியலில் அதிர்ப்தியுற்றதால்  தமிழ் இளைஞர்கள் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம் “என்பதை உருவாக்கினர்.
தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவை (1970), தமிழ் இளைஞர் பேரவை (1973), புதிய தமிழ்ப்புலிகள் (1974), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (1975) என்பன தோற்றம் பெற்றன. தொடர்ந்து விடுதலை இயக்கங்கள் தோன்றி ஆயுதப் போராட்டம் வளர்ந்தது என்பது வரலாறு.
1985 ஆம் ஆண்டு திம்பு மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் பங்குபற்றவில்லை. ஐந்து விடுதலை இயக்கங்களும் பங்குபற்றியிருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் பங்கு பற்றிய அமிர்தலிங்கம் விடுதலை இயக்கங்களுக்கு இங்கு உரிமை கிடையாது என கேள்வி எழுப்பவில்லை.
சரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என வைத்துக் கொள்வோம். சுமந்திரன் பக்கத்தில் தற்போது எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். சுமந்திரனும், சாணக்கியனும், சம்பந்தனும் மட்டும் தான். ஆனால் பொது வேட்பாளர் பக்கத்தில் சிறீதரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், விநோதராகலிங்கம், கோவிந்தன். கருணாகரம், என ஐந்து பேர் இருக்கின்றனர். சாள்ஸ் நிர்மலநாதன் அபிப்பிராயத்தை கூறியிருக்கின்றாரே தவிர தன்னுடைய நிலைப்பாட்டை வலுவாகத் தெரிவிக்கவில்லை. கலையரசன் கட்சி என்ன முடிவினை எடுக்கின்றதோ அதற்குத்தான் கட்டுப்படுவதாக கூறியிருக்கின்றார்.
இவ்வாறு பார்க்கும் போது தமிழ் தேசிய பக்கம் நிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை பொது வேட்பாளர்  பக்கமே இருக்கின்றது. இதனை ஏற்றுக் கொண்டு பெரும்பான்மைக்கு கட்டுப்பட சுமந்திரன் தயாராக இருக்கின்றாரா?
உண்மையில் இந்த முரண்பாடு கோட்பாட்டு ரீதியாக தாயக நலன் சார் அரசியலுக்கும், கொழும்பு நலன் சார் அரசியலுக்கும் இடையிலான முரண்பாடாகும்.
 தமிழரசு கட்சிக்குள் இந்த போக்கு வரலாறு முழுவதும் இருந்திருக்கின்றது ஆனாலும் தாயக நலன் சார் அரசியல் மேல்நிலையில் நின்றதால் கொழும்பு நலன் சார் அரசியல்காறர்களினால் மேலாதிக்கம் செலுத்த முடியவில்லை. சுமந்திரன் மேற்கொள்வது இணக்க அரசியலும் அல்ல. முழுக்க முழுக்க கொழும்பு நலன்சார் அரசியலே! அவருடைய அரசியலை கொழும்பு நலன்சார் இருப்பே தீர்மானிக்கும். கொழும்பில் தமது இருப்பைக் கொண்டவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் தமது இருப்பை பாதுகாக்க பெருந்தேசியவாத அரசுக்கு எப்போதும் முதுகு தடவிக் கொண்டயிருப்பார்கள். இந்த முதுகு தடவும் அரசியல் காரணமாகத்தான் வடக்கிற்கு வரும் பெருந்தேசியவாத அரசியல்வாதிகளுக்கு சுமந்திரன் கம்பளம் விரிக்கின்றார்.
சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை இவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. மனோ கணேசன் இதனை நேரடியாகவே தெரிவித்திருந்தார்.
 “சுமந்திரனும், சாணக்கியனும் தென்னிலங்கையோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆனாலும் தமிழ் மக்களின் விவகாரத்தை தான் கூறுமளவிற்கு கூட தென் இலங்கைக்கு இவர்கள் கூறுவதில்லை. இத்தனைக்கும் தன்னைவிட சாணக்கியன் நன்கு சிங்களம் பேசுவார்  எனக் கூறியிருந்தார்.
இறுதியாக துரோகி பட்டம் கிடைத்தாலும் பொது வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என சுமந்திரன் சூளுரைத்திருக்கின்றார். சுமந்திரனுக்கு இப்பட்டத்தை புதிதாக சூட்டத் தேவையில்லை. அவருக்கு அது ஏற்கனவே கிடைத்து விட்டது. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனக் கூறிய போதும் “ஏக்கிய ராச்சிய” சிந்தனையை முன்வைத்த போதும் அவருக்கு கிடைத்து விட்டது. மரபு ரீதியான கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியதோடு அது நிரந்தரமாகிவிட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews