
பதுளையில் தனது தாயை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
சாரணியா தோட்டம் தங்கமலை பிரிவு கந்தேகெதரவைச் சேர்ந்த 62 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொசன் பௌர்ணமி தினமான 21ஆம் திகதி இரவு மகனுக்கும் தாய்க்கும் இடையே காணி தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின்னர் மகன் கல்லால் தன் தாயை தாக்கியதாகவும்,
கல்லால் தாக்கப்பட்ட பெண் பலத்த காயமடைந்ததாகவும், சிகிச்சைகளுக்காக கந்தேகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்த பெண்ணின் மகன் கந்தேகெதர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும்,
தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட காணி தகராறு கொலையில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கந்தேகெதர வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 4ஆம் திகதி வரை சந்தேக விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.