மகள் பரீட்சைக்கு செல்ல மறுப்பு, தாய் தனக்கு தானே தீ மூட்டி மரணம்…!

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இதன்போது பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா (வயது 48) என்ற 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றினார். அதன்பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews