ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு பொலிஸார் இடையூறு செய்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று தேர்தல் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் துண்டுப் பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த போது வாக்களிக்க வேண்டாம் என்ற கோரிக்கை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

தாம் மேற்கொள்ளவிருந்த விழிப்புணர்வுப் பிரசாரத்திற்கு இடையூறு விளைவித்தமை சட்டவிரோதமானது என குற்றம் சுமத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நீதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
“வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது தானே? இதனை விநியோகிக்க முடியாது, இது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன,” எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினரை பொலிஸார் தடுப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.


தமிழ் மக்களின் பிரதிநிதி முன்னிலையில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் சிங்கள மொழியில் இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் தெரிவித்தார்.
“இது அரசியலமைப்புக்கு எதிரானது, ஏனென்றால் வாக்களிக்க வேண்டாம் என மக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதால், அதைச் செய்ய முடியாது, உடனடியாக நிறுத்துங்கள்.” வாக்களிக்க வேண்டாமென்ற என்ற கோரிக்கை அரசியல் யாப்பின் எந்தப் பிரிவின் கீழ் சட்டவிரோதமானது என்பதை அதிகாரி விளக்கவில்லை. பொலிஸாரின் தலையீட்டின் மத்தியில், சமஷ்டி அரசமைப்பு ஒன்றை நிறைவேற்றுவதற்கு வேட்பாளர்கள் முன்னிற்பார்கள் எனின், பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.


“இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு அகற்றப்பட்டு, சமஷ்டி அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டால், நாங்கள் ஒன்றிணைந்து ஆதரவளிப்போம் எனக் கூறுகிறோம்.”

கடந்த மே மாதம் முதல், தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒற்றையாட்சியில் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாத்திரம் செயற்படும் அரச தலைவரைத் தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி மக்களுக்குத் தெரிவிப்பதை குற்றமாகக் கருதி அதனைத் தடுக்க பொலிஸார் செயற்படுகிறீர்களா என வினவிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், பொலிஸார் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குகின்றார்களா எனவும் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஆனால் ஒன்றைச் சொல்லுங்கள். இந்த நாட்டில் திறமையாக அழித்து பாதாளத்தில் கொண்டுவந்து விடடுள்ளீர்கள். இந்த நாட்டில் ஒரு அரசியல் அமைப்பு மாற்றத்தை கொண்டுவரப் போவது இல்லை. நீங்கள் அழித்துவிட்டீர்களே. பொலிஸாரிடம் தமிழருக்கு நியாயம் இருக்கின்றதா?”

பொலிஸாரின் தலையீடு காரணமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த பொலிஸாரை தலையிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

“நாங்கள் இதனை நிறுத்துகின்றோம். இந்த நாட்டில் ஒரு அரசியல் அமைப்பு மாற்றத்தை கொண்டுவருவதற்கு உங்கள் ஆட்சியாளர்களுக்கு சொல்லி மாற்றத்தை கொண்டுவாருங்கள்.”

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியில் நடத்தப்படும் என, இலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மே மாதம் அறிவித்திருந்த நிலையில்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை எழுத்து மூலம் தமிழ் மக்கள் மத்தியில் விநியோகிக்க ஆரம்பித்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews