தேர்தல் பரபரப்பில் ஐ.நா விடயங்களை மறந்து விட வேண்டாம் – தமிழ்த் தேசியத்  தரப்பினருக்கு ரெலோ கோரிக்கை 

நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்களில் தமிழ் மக்களின் பிரதான விடயமான ஐ.நா அமர்வுகளைப் புறந்தள்ளி விட வேண்டாம் என ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது அமர்வு நடைபெற இருக்கும் இவ்வேளையில் ஐ.நா மனித உரிமை  உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எமது தரப்பில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு  சமர்ப்பிப்பதற்கான  அறிக்கையின் மாதிரி வடிவம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பல நாட்களுக்கு முன்னரே எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உயர்ஸ்தானிகராலய அலுவலர்களுடன் இணையவழியில் நடைபெற்ற  சந்திப்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்  பாராளுமன்ற உறுப்பினர்,  குருசுவாமி சுரேந்திரன் பேச்சாளர் ரெலோ,  மற்றும் பிரான்ஸிலிருந்து ஏற்பாட்டாளர் மகேந்திரன் குலராஜ்  ஆகியோர் கலந்துகொண்டு இருந்தனர்.
சில காரணங்களினால் மற்ற கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை.  இருப்பினும் சந்திப்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட  கலந்து கொண்டவர்கள் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்களின் தற்போதைய நிலை, தொடர்ந்தும் மீறப்பட்டு வரும் மனித உரிமை விடயங்கள் பற்றி  விரிவாக எடுத்துரைத்தனர்.
மனித உரிமைப் பேரவைக்கு சமர்பிக்க தயாராகி இருந்த ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையும் அதில் கலந்துரையாடப்பட்டிருந்தது.  எதிர்வரும் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு முதலாக எமது தரப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
நல்லிணக்கம் மற்றும் பொறப்புக்கூறல் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும் அதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளையும் சர்வதேசத்துக்கு சொல்வதற்கு நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளோம்.  அதில் பொது வேட்பாளரும் ஒரு பொறிமுறையாக கையாளப்படுகிறது.
இந்த நேரத்தில் மனித உரிமை பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் எமது பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கான மிகப் பிரதான தளமாக அமைந்திருக்கிறது.  சர்வதேச நாடுகள் பொறுப்புக் கூறல் மற்றுமை நல்லிணக்கம் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை ஜனாதிபதி தேர்தல் விடையங்களினால் நாம் மறந்து விடல் ஆகாது.
யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றோடு எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைப்  பெற்றுக்கொள்ள ஐ.நாப் பொறிமுறை மற்றும் மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளில் மனந்தளராது தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டு காத்திருக்கும் எமது மக்களின்  எதிர்பார்ப்புகள்  நிறைவேற எமது காத்திரமான தொடர் நடவடிக்கைகள் அவசியமாகும்.
மிகக் கடினமான தேர்தல் விடயங்களை கையாளும்  பொழுதிலும் எமது இன நலன் சார்ந்த பிரதானமான ஐநா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் எமது மக்கள் சார்பாக அறிக்கைகள் இடம் பெறுவது தேர்தல் நலன்களையும் தாண்டி முக்கியமானதாகும்.
 ஆகவே அனைத்துத் தமிழ்த் தேசியப் பரப்பிலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் ஆகியோரை இந்த பேரவை கூட்டத் தொடருக்கான அறிக்கை சமர்ப்பிக்கும் எமது முயற்சியில் கைகோர்க்குமாறு வினயமாக வேண்டுகிறோம்.
கு. சுரேந்திரன்
பேச்சாளர் ரெலோ
(தெரிவித்தவர்)

Recommended For You

About the Author: Editor Elukainews