தமிழர்களுக்கு   எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன் – சபா குகதாஸ் கேள்வி

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது  அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவிக்காமல் கடந்த கால ஆட்சியாளர் போன்று அரசியல் பேசுவது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த காலத்திலும் புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படும் என கூறிய ஆட்சியாளர் தமிழ் மக்களை ஏமாற்றியதுடன் இலங்கைத் தீவின் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கும் வெளி நாடுகளின் அதீத தலையீடுகளுக்கும் வழி வகுத்தனர் இதனை இலகுவில் மறந்துவிட முடியாது.
இலங்கைத் தீவு முன்னேக்கி பயணிக்க வேண்டும் என்றால் மாற்றம் அவசியம் என நீங்கள் உட்பட பலரும் பேசுகின்றனர். அப்படியான சிஸ்டம் சேஞ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலமே நிலையானதாக ஏற்படும் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் தமிழர்களுக்கு எப்படியான தீர்வு வழங்க தயாராக இருக்கின்றீர்கள் என்ற வெளிப்படுத்தல் அவசியம்.
எனவே புதிய சமஷ்டி அரசியல் அமைப்பின் மூலமே தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க முடியும் அப்படியான மனோநிலை ஜனாதிபதி அநுர குமாரவிடம் தெளிவாக இருந்தால் மட்டுமே உண்மையான மாற்றம் வெளிப்படும் மாறாக வெறும் வார்த்தைகளாக தந்திரேபாய அரசியலாக இருக்குமாயின் தற்போதைய பழைய அரசியலமைப்பின் சித்தாந்தம் ஆட்சியில் இருக்குமாயின் வெளிநாடுகளின் சதி வலையில் சிக்கி சீரழியும் நிலை உருவாகும் தமிழர்களை வார்த்தையால் அரவணைப்பது கடினம் என்ற கடந்த கால வரலாற்றை விளங்கி செயலில் காட்டினால் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews