தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 மக்கள் தீர்ப்பு வழங்குவர் – சபா குகதாஸ் காட்டம்!

விடுதலைப் புலிகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்கள் சார்பில் நியாயமான அரசியல் தீர்மானங்களை எடுக்காது தமிழ்த் தேசிய அபிலாசைகளை பலவீனப்படுத்தி கூட்டுப் பாராளுமன்ற பிரதிநித்தித்துவத்தை சிதைத்து 2023 ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து 2024 ஆம் ஆண்டில் பல மிதவாத தலைவர்களதும் பொது மக்களதும் அர்ப்பணிப்பில் வளர்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பல துண்டுகளாக உடைத்து ஒற்றுமை என்ற இலக்கை சிதைத்துள்ளனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த கால தென்னிலங்கையின் அரச நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு சாவு மணி அடித்துள்ளனர் தமிழ் அரசுக் கட்சியினர்.

தாயகத்தில் ஒற்றுமையை பலவீனப் படுத்திய சமநேரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச நீதி வேண்டிய போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் வகையில் விடுதலைப் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவைக்கு அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பலவீனப்படுத்தியுள்ளனர்.

தமிழினத்தின் ஒற்றுமை மற்றும் நீதிப் பொறிமுறையை சிதைத்து விட்டு சுயலாப நோக்கில் போலித் தேசியம் பேசி மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் தமிழ் அரசுக் கட்சிக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நவம்பர் 14 திகதி தீர்ப்பு வழங்குவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews