பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வடக்கின் ஆசிரியர் ஒருவர் மீண்டும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார்

அரசாங்கத்தால் கவனமாகப் பயன்படுத்துவவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA)  பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மீண்டும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு பொலிஸார் அழைத்துள்ளனர்.

கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனிடம், 2024 நவம்பர் 6ஆம் திகதி பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2025 பெப்ரவரி 17ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 01 இல் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும விசாணைப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டில் ஈழம் வரைபடம் மற்றும் கனகபுரம் மயானத்தின் வாயிலின் மாதிரியை உருவாக்க உதவிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் 2025 பெப்ரவரி 17ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனுக்கு பொலிஸார் அனுப்பியுள்ள தகவல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பிக்கும் வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) அதிகாரிகள் தம்மை விசாரிக்க வேண்டுமெனக் கூறிய அச்சுறுத்தியதாக கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கொழும்பிற்கு உங்களை மீண்டும் அழைக்க வேண்டியேற்படும். நீங்கள் எங்களுக்கு நாம் கோரும் தகவல்களை தர வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையேல் உங்களை கைது செய்ய வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டனர். நான் எந்த குற்றமும் செய்யவில்லை எனக் கூறினேன். நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் என்னுடைய அடிப்படை உரிமை மீறப்படும் என முறைப்பாடுகளை செய்ய வேண்டியேற்படும். என்னை பாதுகாக்க சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்படலாம் எனச் சொன்னேன்.”

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, இதுத் தொடர்பில் கடந்த காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பல தடவைகள் அழைத்த பயங்கரவாத பொலிஸார் இதுத் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

2024ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு தன்னை அழைத்த அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை நடத்தியதாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் சுட்டிக்காட்டுகின்றார்.

விசாரணையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றீர்களா? என கேள்வி எழுப்பிய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர்,  இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின்போது இலங்கையின் வரைபடத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் வகையில் இல்லத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் பெயர் விபரங்களை வழங்குமாறு கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறெனினும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வழங்க அவர் கடுமையாக மறுத்திருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க 2025 ஜனவரி 21ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

“அதேபோல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்கள் இலட்சியமோ கொள்கையோ அல்ல, ஆனால் புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை நாட்டின் சட்டங்களை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் சட்ட மூலத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்.”

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு பல முறை அழைக்கப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews