
பெயர் குறித்த நியமனப் பத்திரங்களை பரிசீலிப்பதற்கான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் நேற்றையதினம் (18.03.2025) பி. ப 04.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.






இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர்,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதித்தினம் 19.03.2025 நண்பகல் 12.00 மணி வரை எனவும், நியமனப் பத்திரம் ஏற்கும் இறுதித் தினம் 20.03.2025 நண்பகல் 12.00 மணி வரை எனவும் குறிப்பிட்டதுடன், பெயர் குறித்த நியமனப் பத்திரங்களை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற த் தேர்தல்களின் போது வழங்கிய ஒத்துழைப்பு க்கு அமைய, இம் முறையும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், எமது மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களை வரவேற்பதாகவும், இடமாற்றம் பெற்றுச் சென்ற உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களுக்கு தங்கள் அனைவரின் சார்பிலும் தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற அனைவரது ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
பெயர் குறித்த நியமனப் பத்திரங்களை பரிசீலிப்பது தொடர்பான கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.